
இஸ்லாமாபாத், ஏப்ரல்-30, அடுத்த 24 முதல் 36 மணி நேரங்களில் இராணுவத் தாக்குதலுக்கு இந்தியா தயாராகி வருவதாக, ‘நம்பத்தகுந்த’ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் அறிவித்திருக்கின்றது.
பாகிஸ்தான் மீது போரை திணிக்க முயன்றால் ஏற்படப் போகும் பேரழிவுகளுக்கு இந்தியா மட்டுமே பொறுப்பாகும்.
விடியற்காலை 2 மணிக்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் Attaullah Tarar அவ்வாறு எச்சரித்தார்.
“எந்த விலை கொடுத்தாவது பாகிஸ்தான் அதன் இறையாண்மையையும் பிரதேசத்தையும் பாதுகாக்கும்; முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்” என்றார் அவர்.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்குப் பகுதியில் 26 பேர் கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அத்தாக்குதலுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடியின் யுக்தி, இலக்குகள் மற்றும் சரியான நேரம் குறித்து முடிவெடுக்க ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரம் வழங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, Tarar பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
அத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என அடிப்படையற்ற குற்றச்சாட்டை இந்தியா முன்வைக்கிறது.
“இந்தியா வழக்கம் போல நீதிபதியாகவும், நடுவராகவும், மரணதண்டனை நிறைவேற்றுபவராகவும் செயல்படுகிறது; ஆதாரமில்லாத அதன் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாகவும் கடுமையாகவும் நிராகரிக்கிறது” என்று Tarar கூறினார்.
இந்தியாவுடன் போருக்குத் தயார் என பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் Khwaja Asif-ஃபும் முன்னதாக எச்சரித்தார்