Latestஉலகம்

இந்தியா – பாகிஸ்தான் இராணுவ மோதலில் இந்தியாவின் கையே மேலோங்கியது; பாகிஸ்தானுக்கே சேதாரம்; நியூ யோர்க் டைம்ஸ் தகவல்

நியூ யோர்க், மே-15 – இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நீடித்த அண்மைய மோதலின் போது, இந்திய இராணுவத்தின் கையே ஓங்கியிருந்தது.

பாகிஸ்தானைத் தாக்க இந்தியாவுக்கே அதிக வாய்ப்புகள் இருந்ததோடு, குறிப்பிட்ட இலக்கை அது நினைத்தபடி தாக்கியும் உள்ளதாக, பிரபல நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து இந்தியா திட்டமிட்டு தாக்கியதில, பாகிஸ்தான் இராணுவத் தளங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

துணைக்கோளப் படங்களே அதற்கு ஆதாரமாக இருப்பதாக, நியூ யோர்க் டைம்ஸ் கூறியது.

இந்தியாவின் துல்லியத் தாக்குதலால் பாகிஸ்தானின் போலாரி விமானத் தளம், நூர் கான் விமானத் தளம், ராவல்பிண்டி விமானத் தளம் ஆகியவை பலத்த சேதமடைந்தன.

தாக்குதலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காட்சிகளைத் துணைக்கோள கேமரா படம் பிடித்துள்ளதில், அச்சேதங்கள் தெள்ளத் தெளிவாக தெரிகின்றன.

பாகிஸ்தான் கூறிக் கொண்ட சேத அளவை விட, உண்மையில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

அதே சமயம் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென இஸ்லாமாபாத் கூறியது உண்மையில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் உதம்பூர் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறிக் கொண்டது; ஆனால் மே 12-ஆம் தேதி எடுக்கப்பட்ட துணைக்கோள படங்களில், அங்கு சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை.

ஆக, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல், உலகளவில் அதன் போர் திறனை நிரூபித்துள்ளது.

அதே சமயம், பாகிஸ்தானின் இராணுவ ஆற்றலில் காணப்படும் குறைபாடுகளையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக, நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த 4 நாள் இராணுவ மோதல், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே அரை நூற்றாண்டில் நடந்த மிக விரிவான சண்டையாகும்.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!