
ஷா ஆலாம், ஆகஸ்ட்-31-சிலாங்கூர், செத்தியா ஆலாமில் உள்ள அருள்மிகு தேவி ஶ்ரீ கருமாரியம்மன் பொது ஆலயத்தின் திருக்குட நன்னீராட்டு கும்பாபிஷேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி, காலை 6 மணிக்கு மேல் மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் முடிந்த பின், காலை 7.10 மணியளவில் கும்பாபிஷேகம் பக்தர்களின் விண்ணை முட்டும் கோஷத்துடன் மிக விமரிசையாக நடந்தேறியது.
கும்பாபிஷேகத்திற்குப் பின் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. அதில் ஆயிரக்கக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத்துடன் பங்கேற்று அன்னையின் அருளாசியைப் பெற்றனர்.
அந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவரும் கோத்தா ராஜா கிளையின் ம.இ.கா தலைவருமாகிய டத்தோ ஷங்கர் ராஜ் ஐயங்காரும் சிலாங்கூர் மாநில ம.இ.கா தொடர்புப் பிரிவுத் தலைவர் பன்னீர் செல்வமும் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பன்னீர் செல்வம், ஆலயத்திற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது குறித்து ஆலயத் தலைவர் புகழேந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.
அருள்மிகு தேவி ஶ்ரீ கருமாரியம்மன் பொது ஆலயம் இதற்கு முன் North Hummock Estate கோவிலாக இருந்தது. இந்த ஆலயம் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



