கோலாலம்பூர், ஜனவரி-4, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொன்று சடலத்தை சிதைத்து விடுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென, அப்பெண்ணின் குடும்பத்தார் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி (Azilah Hadri) கடந்த அக்டோபரில் தாக்கல் செய்த affidavit சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில் அக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் அசிலா அம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அசிலாவின் அம்மனு நீதிமன்றம் பதிவுக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது; அல்தான்துயா கொலையில் அரசாங்க உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக அசிலா அதில் கூறியுள்ள குற்றச்சாட்டை தேசியத் சட்டத் துறை அலுவலகம் ஆட்சேபிக்கவில்லை.
அக்குற்ற்சாட்டு கடுமையானதாகும், அரச மலேசியப் போலீஸ் படையின் நெறிமுறைக்கே நேரடி சவால் விடுவதாகும்.
எனவே, இதில் எதையும் மூடி மறைக்காமல் அரசாங்கம் விசாரணை நடத்திட வேண்டுமென, அல்தான்துயா குடும்ப வழக்கறிஞர் Sangeet Kaur Deo கூறினார்.
இது குறித்து கடந்த அக்டோபரிலேயே உள்துறை அமைச்சருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பினோம்; அதன் நகலை பிரதமருக்கும், தேசிய சட்டத் துறைத் தலைவருக்கும் அனுப்பி வைத்து விட்டோம்.
ஆனால் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என்றார் அவர்.
18 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய அல்தான்துயா படுகொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அசிலாவுக்கான மரண தண்டனையை, கூட்டரசு நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்தது.
அசிலாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதை, மனிதநேய அடிப்படையில் தானும் ஆதரிப்பாக அல்தான்துயாவின் தந்தை Dr Shaariibuu நீதிமன்றத்தத்திடம் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.