
’அவசரமாக’ அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் செயற்குழுவின் 6-மாத நடவடிக்கை நிறுத்தக் கோரிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும்; ராமசாமி எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-16
“அனுமதி இல்லாத” இந்து ஆலயங்கள் தொடர்பான விவகாரத்தை மேலும் மோசமாக்கும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட இந்து ஆலயச் செயற்குழுவின் நடவடிக்கை இருப்பதாக, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அக்குழு, அனுமதியில்லாத ஆலயங்கள் இடிக்கப்படுவதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கக் கோரியிருப்பது அதிர்ச்சிகரமானதும் நியாயமற்றதும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் மற்றும் சில முக்கிய நபர்கள் இணைந்து, “அனுமதி இல்லாத” ஆலய பிரச்னையைத் தீர்க்க அக்குழு உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், இது நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களையும் பிரதிநிதிக்கும் குழு அல்ல என ராமசாமி கூறுகிறார்.
ஏற்கனவே இந்து ஆலயங்களின் பாதுகாப்புக்காக, இந்து ஆலயங்கள் பணிக் குழு (HTTF) அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அனுமதி இல்லாத ஆலயங்களின் பிரச்னை மிகவும் சிக்கலானது; குறிப்பாக அவற்றின் வரலாறு, நில பட்டா, சட்டப்பூர்வமாக்கும் நடைமுறைகள் போன்றவை ஒரே நாளில் தீர்க்கப்படும் விஷயங்கள் அல்ல;
நிலைமை இவ்வாறிருக்க, ‘திடீரென’ உருவான இக்குழு, அமுலாக்க நடவடிக்கையை 6 மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்பது “அபத்தமானது” என ராமசாமி சாடினார்.
_“இந்துக்கள் ஏற்கனவே தங்கள் ஆலயங்கள் மீதான அவமதிப்பால் மனவேதனையில் உள்ளனர். அதனை மேலும் மோசமாக்கும் வகையில், உரிய ஆணை-அதிகாரம் இன்றிச் செயல்படும் இதுபோன்ற குழுக்கள் நடந்துகொள்ளக் கூடாது”_ என அவர் கேட்டுக் கொண்டார்.



