
கோலாலம்பூர், ஜூன் 14 – கடந்த ஆண்டு, மலேசிய காவல்துறை (PDRM) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், மலேசியாவில் 100,000க்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட இணைய விலாசங்களின் வழி சிறுவர்கள் ஆபாச வலைத்தளங்களைப் பார்வையிடுவதாக குற்றவியல் அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் அப்துல் ரஹீம் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை வெறும் 17,000ஆக மட்டுமே இருந்ததென்றும், 2017ஆம் ஆண்டு முதல் சென்றாண்டு வரை 100,000ஆக எண்ணிக்கை உயர்ந்ததென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தனித்திருப்பது மட்டுமே இதற்கு காரணமில்லையென்றும், இந்த பிரச்சனையை பெற்றோர்கள் சரியான முறையில் அணுகவும் கவனிக்கவும் வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது.
அதே நேரத்தில் சிறார்களுக்கு தடைசெய்யப்பட வேண்டிய உள்ளடக்கத்தை வழங்கி வரும் ஆபாச வலைத்தளங்களின் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.