கோலாலம்பூர், ஜூன் 4 – தலைநகரில், Op HUU எனும் சாலை சட்டதிட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் சோதனை நடவடிக்கையை, இன்று முதல் இம்மாதம் 15-ஆம் தேதி வரையில், கோலாலம்பூர் போலீசார் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.
வழக்கம் போல, போக்குவரத்து இடையூறு, வெள்ளைக் கோடுகள், வாகன பதிவு எண்கள், மோட்டார் சைக்கிள்கள், சட்டவிரோதமாக செயல்படும் வாகனம் நிறுத்தும் இடங்கள், சிவப்பு சமிக்ஞை விளக்கு, வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்துவது போன்ற குற்றங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்துள்ளார்.
இருநூறுக்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் அந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதனால், வாகனமோட்டிகள் எப்பொழுதும் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி, இதர சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய விவேகமாக வாகனத்தை செலுத்துமாறு ருஸ்டி அறிவுறுத்தியுள்ளார்.
அதோடு, கோலாலம்பூர் நாட்டின் மைய நகரம் என்ற தோற்றத்தை தொடர்ந்து பேணுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, முதலாம் கட்ட Op HUU சோதனை, கடந்தாண்டு ஜூலை மூன்றாம் தேதி முதல் 31-ஆம் தேதியும், இரண்டாம் கட்டம், செப்டம்பர் 15 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.