
கோலாலம்பூர், செப்டம்பர் 15 – மலேசிய தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக இவ்வாண்டு கொண்டாட்டத்தை நடத்தும் சரவாக் மாநில மக்களுக்கும் இந்திய சமூகத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் வளர்ச்சிக்கு சபா, சரவாக் மாநிலங்களின் இயற்கை வளங்களும் மக்களிடையே நிலவும் ஒற்றுமை உணர்வும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வளங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரும் அவற்றைப் பயன்படுத்தும் வகையில் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
பல இன, மதங்களைக் கொண்ட மலேசியாவில் நிலவும் சகிப்புத்தன்மையும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத விழாக்களை ஒன்றிணைந்து கொண்டாடும் பண்பாடும் நாட்டின் பெருமை எனக் கூறிய அவர், அனைத்து மலேசியர்களும் ஒற்றுமையுடன் மலேசிய தினத்தைக் கொண்டாடி, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டுமென வாழ்த்தினார்.



