ஒரே குரலில் பேசுவோம்: இந்தியச் சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அழைப்பு

மலேசிய இந்தியச் சமூகம் தங்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியச் சமூகம் தற்போதைய அரசியல் சூழலை முதிர்ச்சியுடனும் பொறுமையுடனும் அணுக வேண்டும் என்றார் அவர்.
இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் திட்டங்கள், கல்வி உதவிகள், தொழில்முனைவோர் நிதியுதவி, தொழிற்பயிற்சிகள் மற்றும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கான வருடாந்திர ஆதரவு போன்ற பல திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்தின் மூலம் இந்தியச் சமூகத்திற்கு படிப்படியாகக் கிடைத்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது இயல்புதான் என்றாலும், வெறும் விமர்சனங்களை மட்டுமே நம்பி, தற்போது சமூகம் பெற்று வரும் பயன்களை நாம் இழந்துவிடக் கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் இந்தியச் சமூகத்திற்காக என்ன திட்டங்களை வைத்துள்ளன என்ற தெளிவான வரைபடத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இதனிடையே அரசியல் எழுச்சிகளாலோ அல்லது பிரிவினைகளாலோ இந்தியச் சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியாது என்றும், அரசாங்கத்திடம் நமது தேவைகளை ஒரே குரலில் வலுவாகக் கேட்டுப் பெற வேண்டும் என்றும் குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.



