
கோத்தா பாரு, ஜூலை.09 – கிளந்தானில் சுங்கை கிளந்தான் ஆற்றங்கரையில் உள்ள பிரபலமான உணவகமொன்றில் அண்மையில் ரெட்ரோ டிஸ்கோ மற்றும் ஹிப்பி கருப்பொருள் கொண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறித்து விசாரிக்கப்படுகிறது. அதோடு முறையான உரிமம் இல்லாமல் அந்நிகழ்ச்சியை நடத்தியதற்காக அவ்வணிக வளாக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோத்தா பாரு மாநகராட்சி மன்றம் தெரிவித்தது. அது தொடர்பான நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏழு நாட்களுக்குள் பணம் செலுத்தத் தவறினால், நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அந்நடவடிக்கையைத் தவிர்த்து அனுமதியின்றி வணிகம் புரிந்தது உள்ளிட்ட வேறு பல குற்றங்களுக்காகவும் அந்த வணிக வளாக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக 60கள், 70கள் மற்றும் 80களில் நடத்தப்பட்ட ரெட்ரோ டிஸ்கோ, ஹிப்பி பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு உரிமம் இல்லை என்பது கண்டறியப்பட்டதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆண்களும் பெண்களும் கலந்திருந்ததாகக் கருதப்படும் அந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.



