
கோலாலம்பூர், ஜூலை.09 தலைநகரிலுள்ள ஜாலான் ராஜா சாலை, வரும் திங்கட்கிழமை தொடங்கி ஜூலை 27 ஆம் தேதி வரை 15 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுகிறது. கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அளவிலான ‘ஒற்றுமை மெர்டேகா’, ‘சித்ராவர்ணா 2026’ ஆகிய நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த மற்றும் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அவ்வாறு செய்யப்படுகிறது. ஆயத்தப் பணிகள், நிகழ்ச்சித் திட்டச் செயலாக்கம் மற்றும் குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்பகுதியை மீண்டும் திறப்பது ஆகியவற்றையும் அது உள்ளடக்கியிருப்பதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிக்கையொன்றின் வழி தெரிவித்துள்ளது.
எனவே அத்தகவலைத் தெரிந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. அதோடு சாலை அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றுமாறும் நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அவர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
ஜூலை 17 முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள ‘ஒற்றுமை மெர்டேகா’ என்ற மாபெரும் சமூக விழாவைக் காண பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் Dataran Merdekaவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 அமைச்சுகளுடன் இணைந்து கோலாலம்பூர் காவல் துறையின் ஒத்துழைப்புடன் முதல் முறையாக அவ்விழா நடத்தப்படுகிறது. அதே வேளை கலாச்சார நிகழ்வாக ‘சித்ராவர்ணா 2026’, ஜூலை 24 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்திற்கு ஏற்ப அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



