
குளுவாங், ஜூன்-5,
ஜோகூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய குளுவாங் கார் விபத்து வழக்கில் தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
5 பேரின் உயிரைப் பறித்த இந்த விபத்து தொடர்பாக, 19 வயது இளைஞர் ஒருவர் இன்று மீண்டும் கைதுச் செய்யப்படுகிறார்.
இம்முறை அவர் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த வழக்கை கொலைக் குற்றச்சாட்டான குற்றவியல் சட்டத்தின் கீழும், ஆபத்தான முறையில் வாகனமோட்டியதற்கான பிரிவின் கீழும் மாற்றி விசாரிக்குமாறு சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Mercedes Benz காரை ஓட்டிச் சென்ற அந்த இளைஞர், BMW காரை ஓட்டிய தனது 22 வயது சகோதரருடன் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது நிலைதடுமாறிய BMW கார், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி ஜாலான் ரெங்கம்-சிம்பாங் ரெங்கமில் பெரும் விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் அந்த இளைஞரின் சகோதரர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
எதிரே வந்த Toyota Vios காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
உயிர்பிழைத்த அந்த 19 வயது சந்தேக நபர் இன்று காலை குளுவாங் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டு, அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என்று மாவட்ட போலீஸ் தலைவர் பஹ்ரின் நோ உறுதிப்படுத்தியுள்ளார்.



