
கோலாலம்பூர், மே 12 – கோலாலம்பூர் ஜாலான் துன் எச்.எஸ். லீ (Jalan Tun H.S. Lee) பகுதியில் உள்ள மூன்று மாடிக் கடைப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தின் போது கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளிக்கொணர்ந்தனர்.
பாதிக்கப்பட்ட 12 பேரும் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 10 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவர்.
சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் கட்டிடத்தின் தரைத்தளமும் முதல் மாடியும் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, தீ அதிகாலை 5.10 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



