
ஹா ஆலாம், ஆகஸ்ட்-15,தெருவிலங்குகள் மற்றும் வனவிலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் முஸ்லீம்கள் எப்போதும் நற்செயல்களையும் கருணையையும் காட்ட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று ஓதப்பட்ட “இறைவனின் படைப்புகள் மீதான கருணை” என்ற வெள்ளிக்கிழமை குத்பா உரையை சுட்டிக்காட்டி, அதன் சாராம்சத்தை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பூமியைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விலங்குகள், தாவரங்கள், ஆறுகள் மற்றும் இயற்கையை மனிதர்கள் பொறுப்புடன் பராமரிக்க வேண்டும் என்றும், சுல்தானை மேற்கோள்காட்டி சிலாங்கூர் அரச அலுவலகத்தின் ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், வனவிலங்குகளால் பொது மக்களின் பாதுகாப்புக்கோ அல்லது உடமைகளுக்கோ அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க இஸ்லாமியக் கோட்பாடுகள் அனுமதிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
விலங்குகள் மீதான கருணையும் பொது மக்களின் பாதுகாப்பும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை அல்ல என்பதையும் சுல்தான் ஷராஃபுடின் சுட்டிக்காட்டினார்.



