
குவாலா கங்சார், ஆகஸ்ட்-15,குவாலா கங்சார் அருகே, பேராக் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, ஆற்றங்கரையில் பயணப் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாயோங் பாலம் அல்லது சுல்தான் அப்துல் ஜாலில் ஷா பாலம் என்றழைக்கப்படும் பாலத்தின் கீழ், நேற்று மாலை ஆற்றின் நீர்மட்டம் வற்றியபோது சந்தேகத்திற்கிடமான முறையிலும் துர்நாற்றத்துடனும் காணப்பட்ட அந்தப் பயணப் பெட்டி, சுற்றுப்பயணிகளை ஏற்றி வரும் படகோட்டியின் கண்ணில் பட்டுள்ளது.
உடனடியாகப் போலீஸுக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்களும் போலீஸாரும் அப்பையை மீட்டு சோதனையிட்டதில், அதற்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் அடைக்கப்பட்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய சடலம் சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை வழக்காகப் பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பேராக் போலீஸ் தெரிவித்துள்ளது.



