
பாலிங், ஜூன் 4 – கோலா கெட்டிலில் உள்ள ஒரு மளிகைக் கடையில் புகுந்த முகமூடி அணிந்த நால்வர் 20 வயது மதிக்கத்தக்க உதவியாளரை கத்தியால் தாக்கியபின் அவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தனர்.
திங்கட்கிழமை இரவு மணி 8.45 அளவில் தலைக்கவசம் அணிந்திருந்த அந்த கொள்ளையர்கள் வெள்ளை நிற பெரோடுவா பெஸ்ஸா காரில் வந்து, கடை உதவியாளரை அணுகியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent பிராண்டன் ரிச்சர்ட் ஜோ ( Brandon Richard Joe ) தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவன் , பாதிக்கப்பட்டவரின் முதுகில் கத்தியால் தாக்கிய பின் அந்தக் கும்பல் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
காயத்திற்குள்ளான கடை உதவியாளர் பாலிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை.
தண்டனைச் சட்டத்தின் 395 மற்றும் 397 பிரிவுகளின் கீழ், கும்பலாக கொள்ளையிட்டது, ஆயுதமேந்திய கொள்ளை அல்லது காயம் ஏற்படுத்திய குற்றத்தின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என பிராண்டன் ரிச்சர்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



