
புத்ராஜெயா, ஜூன்-7-சபா மாநில வான்பரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தோன்றிய விசித்திரமான பிரகாச ஒளிவட்டம் குறித்த முதற்கட்ட அறிக்கைகளைப் பெற்றுள்ளதை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சான MOSTI உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூன் நான்காம் தேதி வியாழக்கிழமை இரவு, கோத்தா பெலூட் உள்ளிட்ட பல மாவட்டங்களின் வானத்தில் ஒரு மர்ம ஒளிவட்டம் எதார்த்தமாகத் தோன்றி மறைந்தது.
சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவிய இந்த விசித்திரப் நிகழ்வு குறித்து, தனது விண்வெளிப் பிரிவின் வழி முதற்கட்டத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாக MOSTI கூறியது.
இருப்பினும், ராக்கெட் பாகங்கள் போன்ற விண்வெளிப் பொருட்களின் எச்சங்கள் எதுவும் நிலத்திலோ அல்லது கடல் பகுதியிலோ விழுந்ததாக இதுவரை எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை.
தற்போது பிற பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து, சம்பந்தப்பட்ட பகுதி வான்வெளியை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
எனவே, பொது மக்கள் இது குறித்து வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.



