
கெடா, ஜூலை-23 – கெடா கூலிம் நீதிமன்றம், மற்றவர்களுக்குச் சொந்தமான 5 கடப்பிதழ்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 வயதான வங்காளதேசத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளிக்கு 6,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூன் 27-ஆம் தேதி, கூலிமிலுள்ள ஒரு வளாகத்தில், மேலும் ஒருவருடன் சேர்ந்து மியான்மாரைச் சேர்ந்த 3 கடப்பிதழ்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 கடப்பிதழ்களை சட்டப்பூர்வ அனுமதியின்றி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கிடையில், அதே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட மற்றொரு வழக்கில், 53 வயதான வங்காளதேசத்தைச் சேர்ந்தஆடவர், போலியாக தயாரிக்கப்பட்ட அல்லது சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தற்காலிக வேலை அனுமதிச் சீட்டை (PLKS) வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றச்சாட்டை அவர் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிவித்ததால், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது.



