
ஜோகூர், செப்டம்பர் 7 – ஜோகூர், பத்து பஹாட், கம்போங் தம்பாக் பகுதியில் 2 வயது சிறுமி 5 நாய்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் நாய்களைப் பிடிக்கும் பெரிய அளவிலான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில இஸ்லாமிய சமய விவகாரக் குழுத் தலைவர் முகமட் ஃபாரெட் முகமட் காலிட்(Mohd Fared Mohd Khalid) கூறுகையில், நாய்களுக்கு ரேப்பிஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்வதே நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் மாவட்ட அலுவலகம், பத்து பஹாட் நகராட்சி, கால்நடை சேவைத்துறை மற்றும் காவல்துறை இணைந்து நேற்று முதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
ஆகஸ்ட் 12, 26 மற்றும் 30ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட மூன்று நடவடிக்கைகளில் 22 நாய்கள் பிடிக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நடவடிக்கை ஜோகூரின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும் அவரது 12 வயது சகோதரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ஆலோசனை சிகிச்சையும் வழங்கப்படுகிறது. சிறுமியின் மருத்துவச் செலவுகளை ஜோகூர் அரசு முழுமையாக ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



