
கோத்தா கினாபாலு, நவம்பர் 6 – கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் (KKIA), ‘baggage conveyor system’ அதாவது பயணிகளின் பைகளை நகர்த்தும் எந்திரத்தில் சிக்கி தவித்த இரண்டு உடன்பிறப்புக்களை, நேற்றிரவு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே மீட்பு குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு விரைந்து சென்று, மீட்பு பணி வேலைகளை தொடங்கினர் என்று கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் ஹான்னிஸ் மொக்தார் (Hannis Mokthar) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறார்களை விடுவிக்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அவ்விருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பொது இடங்களில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு கிடைத்த தகவலின்படி, 2 மற்றும் 3 வயதுடைய அக்குழந்தைகள் அந்த எந்திரத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து அவ்விபரீத சம்பவம் ஏற்பட்டதென்று அறியப்படுகின்றது.



