
டுங்குன், ஜூலை-29-திரங்கானு, டுங்குனில் Pondok Munazil Sidiqqin, Batu 5 பகுதிக்கு அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட மூவர் இன்று அதிகாலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் 10 வயது நிரம்பிய சிறுவர்கள். மேலும் ஒருவர் 23 வயது இளைஞர் என டுங்குன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி Yahaya Hanafi தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மூவரும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து நீந்துவதற்காக அந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்றுள்ளனர். நால்வரில் ஒருவர் சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
மற்ற மூவர் நீர்வீழ்ச்சியின் உச்சியில் குளிப்பதற்காக ஓடையின் வழியாக மலையேறிச் செல்லும் திட்டத்தை நண்பரிடம் கூறிய விவரமும் தெரிய வந்தது.
இரவாகியும் அம்மூவரும் வீடு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறை, காவல்துறை, உள்ளூர் கிராமவாசிகள் என மொத்தம் 40 பேர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டதாக Yahaya கூறினார்.
தேடல் பணி தீவிரப்படுத்தப்பட்டு அதிகாலை 1 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் இறுதியில் மூவரும் கிராம மக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவர் விளக்கினார்.



