கோலாலம்பூர், ஏப் 16 – தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தபோதிலும் மலேசியர்களில் பலர் அதனை வாங்குவதில் தொடர்ந்து ஆர்வமாக இருக்கின்றனர். எனினும் பயனீட்டாளர்களின் வாங்கும் அளவு சற்று குறைந்திருக்கிறது என மலபார் தங்க நகை மற்றும் வைர விற்பனை கிளையின் தலைவர் Nijeesh Parayil தெரிவித்தார். தங்களது பணத்திற்கு ஏற்றபடி மிகவும் கவனமாக நகைகளை வாங்கும் போக்கு மக்களிடம் காணப்படுவதாக அவர் கூறினார். கடந்த காலங்களில் 10 கிராம்வரை நகை வாங்கியோர் தற்போது 7 மற்றும் 8 கிரேம்வரை குறைவாகவே நகைகளை வாங்குகின்றனர். இந்துக்களை பொறுத்தவரை திருமண நிகழ்வுக்கு அவர்கள் தாலி மற்றும் இதர நகைகளை வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். சீனர்கள் பணம் இருந்தால் அவர்கள் தங்கக் கட்டிகளை வாங்குவதிலும் மலாய்க்காரர்கள் bracelet மற்றும் நீளமான தங்க சங்கிலியை வாங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
நேற்று தங்க விலை ஒரு கிரேமிற்கு 359 ரிங்கிட்டாக இருந்தது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை 15 விழுக்காடு அதிகரித்ததாக Economic times of india தகவல் வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்வுக்காக இந்தியர்கள் நகைகளை வாங்கினாலும் மலாய்க்காரர்கள் முதலீடு நோக்கத்திற்காக நகைகளை வாங்குகின்றனர். வயது வேறுபாடு இன்றி அனைத்து வயதுடையவர்களும் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் திருமணத்திற்காக 50 கிரேம் நகைகளை வாங்கிய தமது வாடிக்கையாளர்கள் தற்போது 30 கிரேமிற்கு வாங்குவது குறைந்து விட்டதாக தாலிக் கொடிக்கு பெயர்போன மஸ்ஜித் இந்தியாவைச் சேர்ந்த Five Star நகைக்கடையின் நிர்வாக இயக்குனர் S. Pugal தெரிவித்தார்.