தஞ்சோங் மாலிம், டிசம்பர்-13, “போலீசை கூப்பிடுங்கள், எனக்கு பயமில்லை” என்ற மிரட்டலுக்குப் பெயர் பெற்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர், பேராக் தஞ்சோங் மாலிமில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Jalan Proton City – Tanjung Malim அருகே நேற்று காலை போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், முறையே 29, 37 வயதிலான இருவரும் கொல்லப்பட்டனர்.
முன்னதாக சந்தேக நபர்கள் Proton Persona காரில் செல்வதாக தகவல் கிடைத்து, ரோந்து போலீசார் அதனைப் பின்தொடர்ந்தனர்.
காரை நிறுத்தச் சொன்ன போது வேகமாகச் சென்றதால், கார் தடம்புரண்டது.
காரிலிருந்து ஒருவன் வெளியாகி போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வேளை, இன்னொருவன் நீண்ட பாராங் கத்தியுடன் தாக்க பாய்ந்தான்.
தற்காப்புக்காக போலீசும் 3 முறை சுட்டதில், இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக, பேராக் போலீஸ் இடைக்காலத் தலைவர் துணை ஆணையர் சு’ல்காஃப்ளி சரியாட் (Zulkafli Sariaat) கூறினார்.
இதையடுத்து, தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் 2023-ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த சுமார் 30 கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வுக் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அக்கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரைப் போலீஸ் தேடி வருகிறது.