
கோலாலம்பூர், மே-10- அலட்டல் இல்லாமல் போய்க் கொண்டிருந்த பி.கே. ஆர் கட்சித் தேர்தல் நேற்று ஒரே நாளில் அதிரடி திருப்பத்தை சந்தித்தது.
இரண்டாவது முக்கியப் பதவியான துணைத் தலைவருக்கு டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியை எதிர்த்து, நூருல் இசா அன்வார் போட்டியிடுவது உறுதியானது.
ஒரு வாரமாகவே அரசல் புரசலாக பேச்சு கிளம்பியிருந்த நிலையில், தாமும் துணைத் தலைவருக்கான போட்டியில் குதிப்பதை ஒருவழியாக நூருல் இசா சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார்.
தாம் போட்டியிடுவதற்கான காரணங்கள் குறித்து நீண்ட அறிக்கை வெளியிட்ட அவர், பி.கே.ஆர். ஒரு குடும்பக் கட்சி என்ற வாதம் ஊசிப் போன விமர்சனம் என சாடினார்.
கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வாரின் மூத்த புதல்வியான நூருல் இசா, இப்போது கட்சியின் உதவித் தலைவராவார்.
முன்னதாக, துணைத் தலைவர் பதவியைத் தற்காப்பதாக ரஃபிசியும் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, ரஃபிசியுடன் மீண்டும் பலப்பரீட்சையில் இறங்குவார் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட பக்காத்தான் ஹாராப்பான் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், இம்முறை எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை.
கட்சியின் அரசியல் போராட்டங்களில் கவனம் செலுத்த ஏதுவாக அந்த உள்துறை அமைச்சர் அம்முடிவுக்கு வந்திருப்பதாக, அவரின் உதவியாளர் கூறினார்.
தலைவர் பதவிக்கு எதிர்பார்த்தபடியே டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடுகிறார்.
அவரின் வேட்புமனு நேற்று உறுதியானது.
மே 24 தேர்தலில் அனைவரின் கவனமும் உதவித் தலைவர் பதவியில் திரும்பிய நிலையில், ரஃபிசி – நூருல் இசா போட்டி தற்போது தேசிய அளவில் பேச்சுப் பொருளாகியுள்ளது.
என்ற போதும் உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் விறுவிறுப்புக் குறையாது என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் நேற்று வரை 11 பேர் போட்டியிட மனு செய்துள்ளனர்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் Dr சத்திய பிரகாஷ் நடராஜன், செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.