
கோலாலாம்பூர், அக்டோபர்-18,
தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார்.
இருளுக்கெதிரான ஒளியின் வெற்றியாகப் பார்க்கப்படும் தீபாவளி, மலேசியர்களை நேர்மை, உண்மை மற்றும் ஒற்றுமை வழியில் முன்னேற்றும் தூண்ட வேண்டுமென்றார் அவர்.
கோலாலாம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸில் இன்று நடைபெற்ற தேசிய அளவிலான மடானி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது பிரதமர் அதனைத் தெரிவித்தார்.
கடந்த ஈராண்டுகளில் மட்டும் 15.5 பில்லியன் ரிங்கிட் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட நிதியை அரசாங்கம் மீட்டதாக அவர் சொன்னார்.
எனவே, தீமைக்கு எதிராக வெற்றியைக் குறிக்கும் தீபாவளியைப் போல, ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தில் பல்லின மக்களும் தோள்கொடுத்து உதவ வேண்டும்.
அதுதான் தீபத் திருநாளின் உண்மை வெற்றிக்கான அர்த்தம் என்றார் அவர்.
இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பிரதமரின் துணைவியார் Datuk ஸ்ரீ Dr வான் அசிசா வான் இஸ்மாயில் (Wan Azizah Wan Ismail) , இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ (Gobind Singh Deo) , தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா உள்ளிட்ட பிரமுகர்களுடன், பல்லினங்களைச் சேர்ந்த் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.