தீவிரவாத சிறுபான்மையினர் அமைதி விரும்பும் பெரும்பான்மையினரின் குரலை நசுக்க இடமளிக்காதீர்: அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே-24,
அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் பெரும்பான்மை மக்களின் குரலை, தீவிரப் போக்குடைய ஒரு சிறுபான்மைக் குழுவினர் நசுக்குவதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் விசாக் தினத்தை ஒட்டி மலேசிய பௌத்த ஆலோசனைக் குழு ஏற்பாடு செய்திருந்த ‘மடானி நல்லிணக்க ஆய்வரங்கில்’ உரை நிகழ்த்திய பிரதமர், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கச் சில குழுக்கள் இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி வருவதாகக் குறிப்பிட்டார்.
வெறுப்பையும் அச்சுறுத்தலையும் பரப்புபவர்கள் ஒரு சிறு குழுவினரே என சுட்டிக்காட்டிய அன்வார், இனம் அல்லது மத வேறுபாடின்றி பெரும்பான்மையான மலேசியர்கள் அமைதியான மற்றும் வெற்றிகரமான நாட்டையே விரும்புகிறார்கள் என்றார்.
வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது எனக் கூறிய பிரதமர், அமைதியை விரும்பும் பெரும்பான்மை மக்கள் ஒற்றுமை மற்றும் பரிவுக்கு ஆதரவாகத் தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



