
கோலாலாம்பூர், மார்ச்-18-ம.இ.கா எப்பொழுதும் தெலுங்கு சமூகத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயல்படுவதாக, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
அதைப்போல தெலுங்கு மக்களும் ம.இ.காவின் நீண்ட நெடிய பயணத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பும் உறுதுணையும் வழங்கி வருவது தம்மை பெருமை கொள்ளச் செய்வதாக அவர் தெரிவித்தார்.
இன்று உகாதி தெலுங்கு புத்தாண்டை கொண்டாடும் தெலுங்கு சமூகத்தினருக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் அதனைக் குறிப்பிட்டார்.
இந்த இனிய நாளில், தெலுங்கு சமுதாயத்தினர் எல்லா நலமும் வளமும் பெற்று தேசிய நீரோட்டத்தில் ம.இ.கா.வின் வழி தங்களின் பங்களிப்பை அளித்து தாங்களும் உயர்ந்து வாழ்வாங்குவாழ வேண்டும் என்றார் அவர்.
அனைத்து மலேசிய தெலுங்கு மக்களுக்கும் உகாதி சுபகாஞ்சலு என அறிக்கை வாயிலாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



