
கோலாலம்பூர், ஏப்.30- உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A ச.விக்னேஸ்வரன் தொழிலாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அரசாங்கம் பல முனைகளில் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கப் பாடுபட்டு வருகிறது. அதே வேளையில் மஇகாவும் தனது பங்குக்கு களத்தில் இறங்கி இந்திய சமூக தொழிலாளர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம். அதன் மூலமே அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக உயர முடியும்.
நாட்டிலுள்ள தொழிலாளர் சமூகத்தின், குறிப்பாக இந்திய சமுதாயத் தொழிலாளர்களின் நலன்களை மஇகா, அரசாங்கத்தின் உதவியோடு தொடர்ந்து பாதுகாக்கும். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். அதேநேரத்தில் தொழிலாளர்கள் நலன் காக்கும் முதலாளிமார்களையும்நாம் மறக்கக் கூடாது என்று தமது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.