
அயோத்தி, ஜூன்-26 – இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்பிலான காணிக்கை பணம் திருடப்பட்ட விவகாரத்தில் தற்போது 8 பேர் பிடிபட்டுள்ளனர்.
ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அளித்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிடிபட்டவர்களில் 6 பேர் கோவிலில் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஆவர்.
இவர்கள் பணத்தை திருடுவது அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர், ஓட்டுநர் என மேலும் இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவில் காணிக்கை நிதியிலிருந்து சுமார் 7 கோடி முதல் 7.5 கோடி ரூபாய் வரை மாயமாகியிருக்கலாம் என தொடக்கக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ‘மெகா’ திருட்டு சம்பவம் குறித்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதை அடுத்து, இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து தற்போது இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



