
நில அத்துமீறலா? சட்ட வழிகளைப் பின்பற்ற அசாலீனா அறிவுரை
புத்ராஜெயா, பிப்ரவரி-16,
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான நிலப் பிரச்னைகளில், நில உரிமையாளர்கள் தனிப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, சட்ட சீர்த்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட் அறிவுறுத்தியுள்ளார்.
நிலம் அத்துமீறப்பட்டிருந்தாலும், கட்டுமானம் சட்டவிரோதமானதாயிருந்தாலும், உரிமையாளர்கள் போலீஸ் புகார், வழக்கறிஞர் நோட்டீஸ் போன்ற சட்ட வழிகளையே நாட வேண்டும்.
மாறாக தனிப்பட்ட முறையில் கட்டுமானங்களை இடிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி விடக் கூடாது.
இது போன்ற நடவடிக்கைகள், மத உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடிய விவகாரமாக இருப்பதால், தேவையில்லாமல் கூடுதல் பிரச்னைகளை இது உருவாக்கக் கூடும் என அவர் எச்சரித்தார்.
சுருக்கமாகக் கூறினால் _“நாம் நமது நீதித்துறையை நம்ப வேண்டும்”_ என்றார் அவர்.
தனியார் நிலம் தொடர்பான முந்தைய ஒப்பந்தங்கள் அல்லது அனுமதிகள் பதிவுச் செய்யப்படாமலிருக்க வாய்ப்புள்ளது; இதன் காரணமாக நீதிமன்றத்தை நாடினால் மட்டுமே நீடித்த மற்றும் வெளிப்படையான தீர்வு கிடைக்கும் என அசாலீனா தெரிவித்தார்.
தவிர, இத்தகைய மத சம்பந்தமான தகராறுகளைத் தீர்க்க மத்தியஸ்தம் போன்ற முறைகள் பயன்படுத்தப்படுவது சிறந்தது என்றும் அவர் பரிந்துரைத்தார்.
நாட்டில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரம் அண்மைய காலமாக பேச்சுப் பொருளாகி உள்ள நிலையில் அமைச்சர் அவ்வாறு சொன்னார்.



