
நீலாய், மார்ச்-6-நேற்று மாலை நெகிரி செம்பிலான், நீலாய் அருகே PLUS நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் தெற்கு நோக்கி செல்லும் 4 பாதைகளும் நீரில் மூழ்கியதால் நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கள் வாகனங்களிலேயே நோன்பு துறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த வெள்ளம், 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அதில் சிக்கிக் கொண்டன; வடக்கு நோக்கி செல்லும் பாதையில் கனரக வாகனங்களால் மட்டுமே கடந்து செல்ல முடிந்தது.
வாகனங்களுக்குள் நோன்பு துறக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வைரலாகின.
இந்நிலையில், PLUS நிர்வாகம், பயணிகள் பொறுமையாக இருக்கவும், இது போன்ற வெள்ளத்தில் வாகனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.



