
சிரம்பான், ஜூலை-20-நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரின் நலனுக்காக, மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, 9.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொகையானது இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்ப்பள்ளிகளுக்கான மேசை, நாற்காலி போன்ற தளவாடப் பொருட்கள், 45 பள்ளிகளுக்கு விவேகப் பலகை (Smart Board) வசதி மற்றும் SPM, STPM மாணவர்களுக்கான பிரத்யேக கல்வி மடானி டியூஷன் திட்டங்கள் இதில் உள்ளடங்கும்.
சமூகநலன் மற்றும் பொருளாதாரப் பிரிவில், 299 தோட்டத் தொழிலாளர்களுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளி மாணவர் உட்பட 395 மாணவர்களுக்கான உயர்கல்வி ஆரம்பகால நிதியுதவி, மற்றும் 74 ஆலயங்களுக்கான தர்மா மடானி நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், சிறுதொழில் முனைவோர் திட்டம், விவசாய மேம்பாட்டுத் திட்டம், டயாலிசிஸ் மருத்துவ உதவி மற்றும் பேரிடர், மகப்பேறு கால உதவிகளை உள்ளடக்கிய ‘தூனாய் மடானி’ திட்டத்தின் மூலமும் பலநூறு இந்தியக் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக மித்ரா தெரிவித்துள்ளது.



