Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தல்: அம்னோவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது MIPP

 

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP), PAS வழியாக அல்லாமல், உம்னோவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் துணைத் தலைவரும், பெரிக்காத்தான் நேஷனல் (PN) பொதுப் பொருளாளருமான எஸ். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் உம்னோவுடன் தனியாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது புதிதான விஷயம் அல்ல. இதற்கு முன்பும் எங்கள் கட்சித் தலைவருக்கு தேசிய முன்னணியில் (BN) இணையுமாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது,” என்று அவர் கூறினார்.

தற்போதைய பேச்சுவார்த்தை நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தே நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கினார்.

மேலும், நெகிரி செம்பிலானில் PAS-உம்னோ இடையேயான ஒத்துழைப்பு தொடர்பான விவகாரம் இதுவரை பெரிக்காத்தான் நேஷனல் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

“ஜோகூர் மாநிலத் தேர்தலிலும் தற்போது நெகிரி செம்பிலான் தேர்தலிலும் PAS எடுத்துள்ள நிலைப்பாடு, அந்தக் கட்சியின் சொந்தத் தலைமையின் முடிவாகும். PN உயர்மட்டக் குழுவில் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்றார்.

இதற்கிடையில், PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், நெகிரி செம்பிலான் தேர்தலை முன்னிட்டு உம்னோவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார்.

தற்போது PAS வசம் உள்ள 14 தொகுதிகளை உம்னோவுக்கு விட்டுக்கொடுக்கவும், அதன்பின்னர் பக்காத்தான் ஹராப்பான் (PH) வசமுள்ள 17 தொகுதிகளின் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடரவும் PAS விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

மேலும், பெர்சத்து தற்போது வைத்திருக்கும் இரண்டு தொகுதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என்றும் அப்துல் ஹாடி சுட்டிக்காட்டியிருந்தார்.

“நெகிரி செம்பிலானில் மலாய்-முஸ்லிம் ஆட்சி தொடர்வதை உறுதி செய்வதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!