
கோலாலம்பூர், ஜூன்-5 – நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இரயில் நிலையங்களின் மேல் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அப்பரிந்துரை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லுடன் ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அரசாங்க மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களை அது உட்படுத்தியிருக்கும்.
பொது மக்களுக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்படுமென்றார் அவர்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆய்வரங்கொன்றில் பேசிய போது பிரதமர் அதனைத் தெரிவித்தார்.
இவ்வேளையில் அத்திட்டத்தை வரவேற்ற போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், LRT மற்றும் MRT நிலையங்களுக்கு அருகில் மக்கள் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் முக்கியக் கொள்கை மாற்றமாக இது இருக்குமென்றார்.
இரயில் நிலையங்களுக்கு அருகிலேயே வீடுகள் இருந்தால் கார்களின் பயன்பாடும் குறையும்;
இதன் மூலம் கார் நிறுத்துமிடத்திற்கான தேவையும் குறைந்து, விடுகளின் விலைகளும் குறையும்.
இது குறித்து வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சுடன் பேசி வருவதாக அந்தோணி லோக் சொன்னார்.