
நேப்பாளம், ஆகஸ்ட் 27 – நேப்பாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை உடனடியாக ஒருங்கிணைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் நிலைமையை விரைவாக மதிப்பிட்டு, இந்தியா மற்றும் நேப்பாளத்திலுள்ள மலேசியத் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளம் காரணமாக நேப்பாளத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களை அவர்களது குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடியாத நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததுடன், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளும் தகவல் சேகரிப்பும் சிரமமாகியுள்ளன. நேபாள அதிகாரிகள் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பேரிடரில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் நிலை இன்னும் தெரியவில்லை.



