பூச்சோங், பிப்ரவரி 1 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் புக்கிட் குச்சாயிலுள்ள, இரண்டு மாடி வீட்டொன்றிலிருந்து, பயன்படுத்தப்பட்ட 19 அராய் மற்றும் ஷூய் ஹெல்மெட்டுகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தால், சமூக ஊடக வர்த்தகர் ஒருவர் 63 ஆயிரத்து 200 ரிங்கிட் வரையில் இழப்பை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நண்பகல் மணி இரண்டுக்கும் 4.45-க்கும் இடைப்பட்ட நேரத்தில் அந்த ஹெல்மட்டுமள் கொள்ளையிடப்பட்டதை, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் எ.எ.அன்பழகன் உறுதிப்படுத்தினார்.
பயன்படுத்தப்பட்ட அல்லது பழுதடைந்த, பிரபல முத்திரையிலான அந்த ஹெல்மெட்டுகளை, மறுசீரமைத்து, 2011-ஆம் ஆண்டு முதல் முகநூல் மற்றும் டிக் டொக் சமூக ஊடகங்கள் வாயிலாக அந்நபர் விற்று வந்துள்ளார்.
எனினும், கடந்த திங்கட்கிழமை, அந்நபரின் வீட்டிலிருந்து அந்த ஹெல்மெட்டுகள் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அவ்வீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கைரேகை மற்றும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவை கொண்டு போலீஸ் விசாராணை மேற்கொண்டுள்ளது.
அதனால், அந்த ஹெல்மெட்டுகளை மீண்டும் கண்டுபிடிக்கும் வரையில், அதனை வாங்கியவர்கள் பொருமைக்காக்குமாறு சம்பந்தப்பட்ட நபர் தமது சமூக ஊடக பதிவு வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.