
செந்தோசா, ஜூன்-15-நேஷனல் கூட்டணியில் பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரிவு, நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலையான தலைமைத்துவம் எவ்வளவு அவசியம் என்பதை காட்டுவதாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 16-ஆவது பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு அவர்களின் பலவீனத்தை காட்டுவதாகக் கூறினார்.
அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் இச்சூழலில், மலேசியாவுக்கு நிலைத்தன்மை மற்றும் தெளிவான திசையை வழங்கக்கூடிய ஒரு தலைவர் தேவைப்படுகிறார்.
அந்த வகையில், பிரதமர் அன்வார் பல்லின மக்களைக் கொண்ட ஒற்றுமை அரசாங்கத்தை திறம்பட வழிநடத்தி, மலேசியா மடானி கொள்கையின் கீழ் பொருளாதார வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
உள்நாட்டு அரசியல் பூசல்களால் திசைதிருப்பப்படாமல், வேலைவாய்ப்பு உருவாக்கம், அந்நிய முதலீடு மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசே மலேசியர்களுக்குத் தேவை என்றும் குணராஜ் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், பலதரப்பட்ட கூட்டணியை நிர்வகிக்கவும் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற்ற அன்வார் மட்டுமே தகுதியான சிறந்த தேர்வு என்று குணராஜ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



