
ஜோர்ஜ்டவுன், மே-30-பினாங்கில் பூட்டப்பட்ட காரிலிருந்து ஆடவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜ்டவுனில் USM எனும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு எதிரே ஜாலான் சுங்கை துவா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் குறித்துப் பொது மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பூட்டப்பட்டிருந்த காரைத் திறந்து பார்த்தபோது, உள்ளே அழுகி, உப்பிப் போன நிலையில் ஆடவரின் சடலம் ஓட்டுநர் இருக்கையில் கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட கடந்த சில நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் கைப்பேசிக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளனர்.
அப்போது, அந்த அழைப்புகள் எதிர்முனையில் எடுக்கப்பட்டபோதிலும், எவ்வித குரலும் ஒலிக்காமல் மௌனமாக இருந்ததாகக் கூறப்படுவது பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், 37 வயது தனது கணவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என அவரின் மனைவி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுச் செய்துள்ள போலீஸார், சடலத்தைப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போதைக்கு இது ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.



