
தாசேக் குளுகோர், ஜூன்-27 – பினாங்கு தாசேக் குளுகோரில் வட்டி முதலை கும்பலின் செயலால் 3 டேரஸ் வீடுகள் தீயில் பாதிக்கப்பட்ட சம்பவத்தை, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தாமான் தாசேக் குளுகோர் உத்தாமாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட அச்சம்பவம் வட்டி முதலையின் நாசவேலையே என, ஒரு வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
தீ சம்பவத்துக்கு முன்பு அக்குடும்பத்துக்கு ‘ah long’ கும்பலின் எச்சரிக்கைக் குறிப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து விரிவான விசாரணைகள் நடப்பதாகக் கூறிய செபராங் பிறை உத்தாரா போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான், தீயணைப்புப் படையின் தடயவியல் ஆய்வறிக்கைக்காக போலீஸ் காத்திருப்பதாக சொன்னார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 3 வீடுகள், 5 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் தீயில் சேதமடைந்தன.
எனினும் அதில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.
வட்டிக்கு வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என முன்னதாக அம்மூன்று வீடுகளில் ஒரு வீட்டின் உரிமையாளருக்கு ‘ah long’ மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அதில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர், அம்மூன்று வீடுகளில் எதிலும் தங்கியிருக்காதவர் என, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் முன்னதாக ஃபேஸ்புக்கில் கூறியிருந்தார்