
ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்-10-பினாங்கு பாலத்தில் நேற்று அதிகாலை Perodua Axia கார் ஒன்று தீப்பிடித்த சம்பவத்தில் மாது ஒருவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியிருக்கிறார். அக்காரின் 40 சதவீதப் பகுதி சேதமடைந்தது. எனினும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
தீவுப் பகுதியிலிருந்து Prai நோக்கிச் செல்லும் பாதையில், பாலத்தின் 1.4-வது கிலோமீட்டர் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அது குறித்து அதிகாலை 3.07 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை 3.26 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழுமையான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அச்சம்பவம் குறித்த விசாரணைப் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாகனத்தின் இயந்திரப் பகுதியில் தீப் பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.



