
உக்ரைன், செப்டம்பர் 6 – ரஷ்யாவுக்கு எதிரான போருக்குத் தேவையான நிதியை திரட்டும் நோக்கில், நாட்டில் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்து உக்ரைன் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2.5 கோடி அமெரிக்க டாலர் வரி வருவாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உக்ரைனில் ஆபாச உள்ளடக்கத்தை தயாரித்தல், வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் சட்டவிரோதமாகும். இதற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். எனினும், தடையை மீறி இந்தத் துறை வளர்ந்து வருவதுடன், காவல்துறை ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர், இந்தத் துறையை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், போருக்குத் தேவையான 30,000 வரையிலான ராணுவ ட்ரோன்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படலாமென அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், OnlyFans உள்ளிட்ட தளங்களில் செயல்படும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சில உள்ளடக்க உருவாக்குநர்கள், வரி செலுத்திய பின்னரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை சோதனை மற்றும் லஞ்சம் கோரப்பட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.



