
கிளாந்தான், செப்டம்பர் 6 – கிளாந்தான் குவா மூசாங், டிரான்ஸ் கெரா (Trans Gerah) மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 வயது சிறுவன் உட்பட 6 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களுடன் தொடர்பு கிடைக்காததால், இன்று தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் இரண்டு மலை வழிகாட்டிகள் உட்பட, சிலாங்கூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேரும் உள்ளடங்குவர் . அதில் பெற்றோருடன் 13 வயது மகளும், 9 வயது மகனும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழு ஆகஸ்ட் 29ஆம் தேதி குவா மூசாங்கிலிருந்து மலையேற்றத்தைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை பேராக் மாநிலத்திலுள்ள போஸ் கெமாரை (Pos Kemar) அடைய வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் அங்கு சென்றதாக தகவல் இல்லை. செப்டம்பர் 1ஆம் தேதி அவர்கள் பேராக் பகுதிக்குள் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மலைப்பாதை மிகவும் கடினமாக இருப்பதால் பயணம் தாமதமாகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. தேவையானால் STORM சிறப்பு மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மலை வழிகாட்டிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.



