
ம.இ.கா வருகின்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தமது காடேக் தொகுதியைத் தற்காத்து போட்டியிடும் என கட்சியின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தை போன்ற சூழலை ஏற்படுத்தாமல் மலாக்காவில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ம.இ.கா வேட்பாளருக்கு இந்தியர்கள் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என நேற்று சிரம்பானில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய அரசியல் நீரோட்டத்தில் எல்லா கட்சிகளிலும் அதிகரித்து வரும் மத மற்றும் இனவாத அரசியலை கணக்கில் கொண்டும் தங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையிலும் இந்தியர்கள் வருகின்ற தேர்தல்களில் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
வருகின்ற மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சண்முகத்தை தவிர்த்து வேறு எந்த வேட்பாளரும் தற்போதைக்கு பரிசீலனையில் இல்லை என்றும் அவர் கூறினார்.



