
மியாமி, செப்-07-மியாமி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர். Puerto Ricoவில் இருந்து மியாமி சென்ற அந்தப் போயிங் 767-300 ரக விமானம், தரையிறங்கிய சிறிது நேரத்தில் பல வாகனங்கள் மீது மோதி பின்னர் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சுமார் 200 தீயணைப்பு, பணியாளர்களும் 60 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. விமானத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்தில் காயமடைந்த ஐவரில் மூவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்திற்குள் சிக்கியிருந்த விமானி, துணை விமானியை மீட்கக் தொழில்நுட்ப மீட்புக் குழுவினர் கடுமையாகக் போராடியதாக அவர்கள் கூறினர். விமானியும் துணை விமானியும் உயிர் பிழைத்தார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க கூட்டரசு விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றன.
விபத்தைத் தொடர்ந்து மியாமி அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் டெக்சி பாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



