
கோலாலம்பூர், செப். 7 (பெர்னாமா) — நாட்டில் தற்போது புகைமூட்டம் காணப்படும் நிலையில், பிள்ளைகளின் சுகாதாரம் குறித்து பெற்றோர் கவலைப்பட்டால் அவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருக்கலாம். அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. எனினும் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை என்றால், பெற்றோர் அது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டம் நிலவுகிறது. அதனால் பெற்றோர்கள் அஞ்சுவது சகஜமே. அதனைத் தம்மால் புரிந்து கொள்ள முடிவதாக கூறிய அவர், பிள்ளைகளின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்புக்கும் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்றார். அதே சமயம் புகைமூட்ட நிலவரம் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சுற்றுச்சூழல் துறை வெளியிடும் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடுகளின் (IPU) அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். IPU 100ரைத் தாண்டினால் வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். IPU 200ரைக் கடந்தால் பள்ளிகள் மூடப்படும் என அமைச்சர் விளக்கினார்.
இதனிடையே, இன்று காலை நிலவரப்படி சரவாக்கின் Samarahan பகுதியில் IPU குறியீடு 226 ஆகப் பதிவாகி, மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. நாடு முழுவதும் 40 பகுதிகள் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகவும், 24 பகுதிகளில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளில் மட்டுமே காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.



