
கோலா திரங்கானு, செப்- 7–பேராக், சுங்கை சிப்புட், Kampung Choh பகுதியில் கடந்த ஜூலை 22ஆம் தேதி மீட்கப்பட்ட மலாயான் வகை பெண் புலியான ‘Yong Choh’, Tasik KENYIRரில் உள்ள திரங்கானு தேசியப் பூங்காவில் அதன் இயற்கை வாழ்விடத்தில் மீண்டும் விடுவிக்கப்பட்டது.
சுமார் ஏழு வயதான Yong Chohவுக்கு பேராக், Sungkaiயில் உள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்தில் கால்நடை மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, நோய் பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. அப்புலி மீண்டும் காட்டில் வாழ ஆரோக்கியமாக இருப்பதாக வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN உறுதி செய்தது.
வனவிலங்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, மனித-வனவிலங்கு மோதல்களைக் கையாளும் முயற்சியின் ஒரு பகுதியாக அப்புலி மீண்டும் அதன் இயற்கை வாழ்விடத்திலேயே விடப்பட்டதாக இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Datuk Seri Arthur Joseph Kurup தெரிவித்தார்.
அதன் வழி இயற்கை வாழ்விடங்களில் வனவிலங்குகளின் எண்ணிக்கையை நிலைநிறுத்துவதோடு, விடுவிக்கப்படும் விலங்குகளிடையே மரபணுப் பன்மையை அதிகரித்து, அழிந்து வரும் உயிரினங்களின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
Yong Chohவைத் தவிர்த்து, கருஞ்சிறுத்தைகள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், எறும்புத் தின்னிகள், பனைப் புனுகுப்பூனைகள், யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் இதற்கு முன் மீண்டும் இயற்கை வாழ்விடங்களில் விடுவிக்கப்பட்டுள்ளன.



