
லக்னோ, செப்டம்பர் 7 – லக்னோவில் 28 வயதான சிவானி, 2024 மே 2ஆம் தேதி காணாமல் போன நிலையில், 27 மாதங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை தனது பெற்றோர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் இறந்துவிட்டதாகக் கருதிய குடும்பத்தினர், வேறொரு பெண்ணின் உடலை சிவானி என தவறாக அடையாளம் கண்டு இறுதிச்சடங்கு செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
2024 ஜூலை 16ஆம் தேதி சாலை அருகே கால்வாயில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கையில் இருந்த கயிறு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது சிவானியின் உடல் என குடும்பத்தினர் அடையாளம் கண்டனர். இதையடுத்து, அவரது மாமியார் குடும்பத்தினர் மீது கொலை மற்றும் வரதட்சணை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பின்னர் நடத்தப்பட்ட DNA பரிசோதனையில் மீட்கப்பட்ட உடல் சிவானியுடையது அல்ல என்பது உறுதியானது. தற்போது சிவானி 27 மாதங்கள் எங்கு இருந்தார், அவர் தானாகச் சென்றாரா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பதுடன், கால்வாயில் மீட்கப்பட்ட உடல் யாருடையது என்பதையும் போலீஸார் மீண்டும் விசாரித்து வருகின்றனர். சிவானியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.



