
புத்ராஜெயா, ஜனவரி-22,முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டின் 2 மூத்த மகன்கள் ஒருவழியாக தங்களின் சொத்து விவரங்களை அறிவித்திருக்கின்றனர்.
அவ்வறிவிப்பு தமக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பாணையம் MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
தான் ஸ்ரீ மொக்சானி மகாதீர் கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட் சொத்து மதிப்பை அறிவித்துள்ளார்; அவற்றில் அவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 316 மில்லியன் ரிங்கிட்டாகும்.
அதே வேளை, மிர்சான் மகாதீரின் மொத்த சொத்து மதிப்பு 246.2 மில்லியன் ரிங்கிட்; தனிப்பட்ட மதிப்பு 120 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென அசாம் பாக்கி சொன்னார்.
இருவருமே தம்மிடம் நேரடியாக சொத்து விவரங்களை அறிவித்ததாக அவர் கூறினார்.
அறிவிக்கப்பட்ட சொத்துக்களை, MACC-யின் தடயவியல் அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலான சொத்து விவரங்களை அறிவிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, கடைசியில் கடந்த செப்டம்பரில் மொக்சானியும் மிர்சானும் ஒருவழியாக சொத்துக்களை அறிவித்தனர்.
தங்களின் தந்தையான மகாதீர் 1981-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, தாங்கள் குவித்த சொத்துகளை அறிவிக்குமாறு மொக்சானியும் மிர்சானும் முன்னதாகக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.