
ஜோகூர் பாரு, மே-28 – சமூக ஊடக செயலிகள் வாயிலாக போதைப் பொருட்களை பொட்டலமிட்டு விநியோகம் செய்யும் கும்பலை, ஜோகூர் போலீஸ் முறியடித்துள்ளது.
மே 20, 21-ஆம் தேதிகளில் ஜோகூர் போலீஸின் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட சோதனையில் அக்கும்பல் சிக்கியது.
முதல் சோதனையில் 32 வயது உள்ளூர் ஆடவரும் 29 வயது வியட்னாமியப் பெண்ணும் கைதானதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் கூறினார்.
அவர்களில் காருக்குள்ளிருந்து ஷாபு, கெத்தமின், எரமின் 5 வகை போதைப் பொருள் பேக்கேட்டுகள் கைப்பற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக டேரஸ் எனப்படும் தொடர் தரை வீட்டொன்றில் இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது; அதில் அதே கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 வியட்நாமியர்கள் கைதாகினர்.
போதைப் பொருள் சேமிப்புக் கிடங்காக அவ்வீடு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
மொத்தமாக 1.23 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர, 3 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 9,320 ரிங்கிட் ரொக்கம், 34,453 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நகைகள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் அனைவரும் ஜூன் 2 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.