Latestமலேசியா

சிலாங்கூரில் 2 இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்; சதிநாச வேலையா என உரிமைக் கட்சி கேள்வி

கோலாலம்பூர், மே-19 – சிலாங்கூரில் கடந்த ஒரே வாரத்தில் 2 இந்து ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, உரிமைக் கட்சியின் இடைக்கால துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் கூறியுள்ளார்.

இது நாட்டில் அதிகரித்து வரும் மத சகிப்பின்மை குறித்த கவலைகளை ஏற்படுத்துவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார்.

முதலில் காப்பார் ஸ்ரீ மகா ஆயிரம் கண்ணுடையார் ஆலயத்தில் தெய்வச் சிலை உடைக்கப்பட்டது.

இப்போது அதே மாதிரி சம்பவம், கம்போங் தாசேக் அம்பாங், தேவி ஸ்ரீ காளியம்மன் ஆலத்தில் நிகழ்ந்துள்ளது.

அங்கு சிலைகளைச் சேதப்படுத்த முயன்ற ஓர் ஆடவர் கைதுச் செய்யப்பட்டார்.

இதில் என்ன பெருத்த ஏமாற்றம் என்றால், விரிவான விசாரணை எதுவுமின்றி, சம்பந்தப்பட்ட நபர் மனநிலை சரியில்லாதவர் என முத்திரைக் குத்தப்பட்டு விட்டார்.

நடந்த சம்பவத்தின் கடுமையை மறைக்க முயலும் செயலே இதுவென மார்ஷல் சாடினார்.

இரண்டு சம்பவங்களும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான சதிநாச நோக்கத்தைக் கொண்ட தரப்புகளால், வேண்டுமென்றே திட்டமிடப்பட்டிருக்கலாம்.

சில கோயில்கள் “சட்டவிரோதமான கட்டமைப்புகள்” என்ற குற்றச்சாட்டுகள் உட்பட, சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் ‘தீவிரவாதக்’ கதைகள் குறித்தும் மார்ஷல் கவலை தெரிவித்தார்.

இந்து பக்தர்களை குறிவைத்து தவறான மற்றும் சினமூட்டும் தகவல்களைப் பரப்பும் சமூக ஊடகக் கணக்குகளுக்கு எதிராக இதுவரை எந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததும் வருத்தமாக உள்ளது.

நடப்பவற்றை எல்லாம் பார்த்தால் மதத் தீவிரவாதச் சிந்தனை பயங்கரவாதமாக மாறக்கூடிய சாத்தியங்கள் தெரிகிறது.

தேசிய நல்லிணக்கம் என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு; அனைவருக்கும் அமைதியையும் நீதியையும் உறுதிச் செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டேவிட் மார்ஷல் வலியுறுத்தினார்.

இவ்வேளையில், கைதான ஆடவர் வேலையில்லாத 33 வயது இந்தோனேசியர் என்றும், அவரை விசாரணைக்குத் தடுத்து வைக்க நாளை நீதிமன்ற ஆணைப் பெறப்படுமென்றும், சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் அம்பாங் போலீஸ் தலைவர் கூறினார்.

சம்பவத்தின் போது போதைப் பொருளும் உட்கொண்டிருந்த அந்நபரிடமிருந்து, சுத்தியல், இரும்புக் கம்பியை வெட்டும் கருவி, 2 பாராங் கத்திகள், ஒர் கெரிஸ் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தியதற்காக அந்நபர் விசாரிக்கப்படவிருக்கும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!